கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
காரை அஜித்குமார் ஓட்டி வந்தார்.அப்போது கார் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கோமுகி ஆற்றங்கரை அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலையோர தடுப்பு சுவரில் மோதியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஒன்றரை வயது குழந்தை, அஜித்குமார், அவரது மனைவி மதுமிதா, மாமியார் தமிழ்ச்செல்வி உள்பட 4 பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.