வருடத்திற்கு கோடிகணக்கில் செலவாகி வரும் நிலையில் வருவாய் மற்றும் குறைவாக உள்ளது இருப்பினும், ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தொடர்ந்து அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
அம்மா உணவகத்தில் புதிய பெயர் பலகைகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதை சேவை மனப்பான்மையுடன் செய்து வருவதாகவும் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ( மண்டலம் – 13 ) சைதாப்பேட்டை வெங்கடாபுரம் / வார்டு 19 பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடு, வழங்கப்படும் உணவின் தரம், காய்கறிகளின் தரம் குறித்து மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு செய்தார்….
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், முதலமைச்சரின் ஆலோசனைப்படி சென்னையில் 393 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் சைதாப்பேட்டையில் இரண்டு இடங்களில் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். முதலமைச்சர் பதவி ஏற்ற நாள்முதல் அம்மா உணவகங்கள் முன்னாள் முதல்வர் பெயரில் இருந்தாலும் ஏழை எளிய மக்களுக்காக இதை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வகையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்களில் எந்தவிதமான விலை ஏற்றமும் இல்லாமல் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், அம்மா உணவகத்தை மண்டல அளவில் பராமரிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும், ஏதாவது தளவாட பொருட்கள் பழுதாக இருந்தால் அதை சரி செய்யும் பணியும் , அம்மா உணவகங்கள் என்ற பழைய பெயர் பலகைகளை மாற்றி புதிய பலகைகள் வைக்கின்ற பணியும் மேற்கொள்ள மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
அம்மா உணவகத்தில் ஒரு வருடத்திற்கு 15 கோடி ரூபாய் தான் வருமானம் வருகிறது. ஆனால் செலவு என்று பார்க்கும் போது 97 கோடி ரூபாய் வருடத்திற்கு செலவாகிறது. பற்றாக் குறை 82.5 கோடி இருந்தால் கூட, ஏழை எளிய மக்களுகாகாக முதல்வர் இதை செய்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 4.5 கோடி ஒதுக்கீடு செய்தாலும் தற்போது கூடுதலாக 4.5 கோடி ஒதுக்கீடு செய்து 9 கோடி அம்மா உணகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் அறிவிப்புகளின் படி, அம்மா உணவகத்தில் புதிய பெயர் பலகைகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதை சேவை மனப்பான்மையுடன் செய்து வருவதாகவும் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து கேட்டதற்கும், இன்று மாலை 4 மணிக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும் கூறினார்.