பாஜகவிலிருந்து அதிமுக விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைப்பதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை” சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.