டெல்லி: தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியுள்ளது. விரைவில் சட்டமாக்கப்பட உள்ள நிலையில் அது எந்த வகையில் டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியான் தலைநகரான டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அக்கட்சியின் ஒரங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியை பொறுத்தமட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம், கண்காணிப்பு அதிகாரம் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள துணை நிலை ஆளுநரிடம் உள்ளது.

இதனை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் குடிமை பணி அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரம் என்பது டெல்லி அரசுக்கு தான் உள்ளது. இதில் ஆளுநர் மூலம் மத்திய அரசு தலையிட முடியாது என அதிரடியாக மே மாதம் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மாறாக டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமன அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு கிடைத்தது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் ஆம்ஆத்மி அரசு அதிர்ச்சியில் உள்ளது. மேலும் மத்திய அரசு குறுக்கு வழியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கிறது என தெரிவித்துள்ளது. டெல்லி சேவைகள் மசோதா (Delhi Services Bill) என்பது தேசிய தலைநகரான டெல்லியில் அரசு திருத்த மசோதா 2023 (Government of National Capital Territory of Delhi (Amendment) Bill 2023) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த 3ம் தேதி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே 4 மணிநேர விவாதத்துக்கு பிறகு லோக்சபாவில் நிறைவேறியது. நேற்று எதிர்க்கட்சிகட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே ராஜ்யசபாவிலும் 6 மணிநேர விவாதத்துக்கு பிறகு நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கும் நிலையில் அது சட்டமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதா என்றால் என்ன? இந்த மசோதா எப்படி டெல்லி அரசை பாதிக்கும்? என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இதனை பயன்படுத்தி தான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு டெல்லி
சேவைகள் மசேதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய இந்த மசோவின்படி அதிகாரிகள் செயல்பாடு என்பது மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது சட்ட திருத்த மசோதாவின்படி சிவில் சர்வீசஸ் ஆணையத்தின் (என்சிசஎஸ்ஏ அல்லது தேசிய தலைநகர் குடிமைப்பணி ஆணையம்) உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக டெல்லி முதல்வர் இருப்பார். மேலும் டெல்லி தலைமை செயலாளர், டெல்லி உள்துறை செயலாளர்களும் இடம்பெறுவார். இவர்கள் அதிகாரிகளின் பணியிடமாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய பரிந்துரைகளை துணை நிலை ஆளுநருக்கு வழங்கலாம்.
இதில் இறுதி முடிவு என்பது துணை நிலை ஆளுநரை சார்ந்து தான் இருக்கும். இதனால் மீண்டும் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அதிகாரம் என்பது இந்த சட்ட திருத்த மசோதா மூலம் துணை நிலை ஆளுநர் வசம் உள்ளது. மேலும் டெல்லி சட்டசபை ஒத்திவைத்தல், கலைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக இந்த ஆணையம் பரிந்துரையில் துணை நிலை ஆளுநர் இறுதி முடிவு எடுக்க முழு உரிமை உண்டு. இதுதவிர அதிகாரிகள் மீதான விசாரணை மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த மசோதா வழி வகுக்கிறது. இதன்மூலம் மீண்டும் குடிமைப்பணி அதிகாரிகள் விவகாரத்தில் டெல்லி அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
மாறாக துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.