சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி .இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி அருகே 1 ஏக்கர் 50 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது .
பத்மாவதியின் உடன் பிறந்த சகோதரர் பச்சையப்பன் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து தன்னுடைய பெயருக்கு அந்த இடத்தை பதிவு செய்து கொண்டார்.
இதை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மேற்கண்ட போலி ஆவணங்களை ரத்து செய்யும் உத்தரவினை நீதிமன்றத்தில் பெற்றார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளரை சந்தித்து நீதிமன்ற உத்தரவினை அளித்தார்.
நீதிமன்ற உத்தரவு காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து வாலாஜாபாத் துணை பத்திரப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
நீண்ட நாட்கள் ஆகியும் போலி ஆவணங்களை ரத்து செய்யாத காரணத்தினால் உலகநாதன் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார்.
அப்போது அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் நவீன்குமாரை அணுகி கேட்டபொழுது 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அந்த பதிவை ரத்து செய்து தருவதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உலகநாதன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ.1 லட்சம் தருவதாக கூறுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று மாலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை உலகநாதனிடம் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட நவீன்குமாரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் பேரில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற உலகநாதன், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நவீன்குமாரிடம் கொடுக்க சென்றபோது, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ்பாபு என்பவரிடம் லஞ்ச பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
உலகநாதன் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டரிடம் கொடுத்தவுடன் பணத்தை எடுத்துச் சென்று நவீன்குமாரின் பைக்கில் வைத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுரேஷ்பாபுவை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் விசாரணை செய்தபோது, அலுவலக உதவியாளர் நவீன்குமாரிடம் கொடுப்பதற்காக மேற்கண்ட பணத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.
அதனடிப்படையில் அலுவலக உதவியாளர் நவீன்குமார் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ்பாபு ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.