முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்த வழக்கு..

0
76
  • முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில்  மேம்பாலங்கள்  கட்டப்பட்டன. இதில், 115 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2001ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கி 2005ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து 2005ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா?, 15 – 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், மனுதாரர் தனது நேர்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க கோரி மனுதாரர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/thanjavur-1039-students-participated-in-various-programs-on-the-occasion-of-1039th-sadaya-festival/

இதனை ஏற்ற தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர் டெபாசிட் செய்த தொகையை திருப்பி அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here