நாங்குநேரியில் சக மாணவர்களால் ஆயுதம் கொண்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தமிழக முதலமைச்சர் ஆறுதல் கூறினார். திமுக சார்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் ஆயுதம் கொண்டு தாக்கி படுகாயம் ஏற்படுத்தப்பட்ட பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.
அப்போது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் எடுத்துரைத்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ கல்லூரி முதல்வரிடம் அறிவுறுத்தினார் .
ஸ்டாலின் ஆறுதல்
இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் தொலைபேசி ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு தங்களது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கும் அரிவாள் வெட்டு சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த முதியவர் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் திமுக சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு நாங்குனேரியில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்த உடன் முதல்வர் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.முதல்வரும் நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாயிடம் பேசியிருக்கிறார்.குழந்தைகளின் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்கும் எனவும் முதல்வர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தபட்டுள்ளது.குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.