தமிழக அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் தமிழகம் சிறைத்துறையில் முதல் இடத்திற்கு வந்துள்ளது; கோவை நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேச்சு.
தமிழக சிறைகளில் தண்டனை காலத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 6000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 15,000 வரை சம்பாதித்து மாதாமாதம் குடும்பத்திற்கு அனுப்பும் நிலை உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழக சிறை அங்காடிகள் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய சிறை, கோவை, புழல், வேலூர், பாளையங்கோட்டை, மற்றும் பார்சல் பள்ளி புதுக்கோட்டை ஆகிய ஐந்து சிறை வளாகங்களில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறை துறையால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு, பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் “ஃப்ரீடம் பில்லிங் ஸ்டேஷன்” என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து “ஃப்ரீடம் பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில்” மொத்த விற்பனை 847.31 கோடி ரூபாய் அளவிலும், லாபம் ரூபாய் 23.94 கோடியும், அதில் சிறை வாசிகளின் ஊதியம் 2.37 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், கோவையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பிரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் கடந்த மாதம் வரையில் மொத்த விற்பனை 253.75 கோடி ரூபாயும், மொத்த லாபம் ரூபாய் 8.65 கோடியும் மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் 69.10 லட்சம் ஆகும்.
இந்நிலையில், கோவையில் சிறைத்துறையின் 2 ஆவது பிரீடம் பெட்ரோல் விற்பனை நிலையம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பாரதியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.