சிஐடியு பேச்சுவார்த்தை தோல்வி.! ஸ்ட்டிரைக் நோக்கி நகரும் அபாயம்.!

0
118
சிஐடியு ஸ்ட்டிரைக்

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்க அரசு முடிவெடுத்தது. இதற்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே விரைவில் ஸ்டிரைக் ஏற்படும் அபாயமும் எழுந்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் ஒப்பந்த பணிகள் வந்துவிட்டன. அரசு வேலைகளை காட்டிலும் ஒப்பந்த வேலையில் ஊதியம், பணி பாதுகாப்பு போன்றவை குறைவு. எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து அகற்றப்படும் அபாயம் இதில் இருக்கிறது. அதேபோல ஒரு நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் அந்த தொழிலாளிக்கு, அடிப்படை உரிமைகள் கூட இந்த ஒப்பந்த பணிகளில் மறுக்கப்படுகின்றன. எனவே இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில்தான் போக்குவரத்து துறையிலும், அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கும் பேருந்துகளிலும் ஒப்பந்த ஊழியர்களை களமிற்க தமிழக அரசு முடிவெடுத்தது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிக்க ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மறுபுறம், மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் 520 ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திலும் 100 ஓட்டுநர்களைத் தனியார் மூலம் நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே இதை எதிர்த்து சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவெடுத்துள்ளன. தமிழக அரசின் நடவடிக்கை ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்துக்கு எதிராகவும், ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரத்துகளுக்கு முரணாகவும் உள்ளதாக சிஐடியு குற்றம்சாட்டியுள்ளது. எனவே அரசு தரப்பில் பேச்சுவாரத்தைக்கு அழைக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 31ம் தேதி சிஐடியுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்ததையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே ஜூன் 9ம் தேதி அடுத்தகட்ட
பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. கடைசியாக நேற்று தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்து கழகத்தின் பொது
மேலாளர்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த 6வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எனவே விரைவில் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராஜன், “தற்போது தமிழக போக்குவரத்து துறையில் ஏறத்தாழ 16,000 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால் அரசு வெறும் 812 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்களை மட்டும் நிரப்ப முன்வந்திருக்கிறது. மொத்த காலிப் பணியிடங்களுக்கும், அரசு அறிவித்துள்ள எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. திருத்தப்பட்ட விதிகளின்படி எத்தனை வண்டிகள் இருக்கின்றனவோ அந்த அளவிலாவது ஊழியர்களை எடுக்க வேண்டும். ஆனால் அரசு அறிவித்திருப்பது அதற்கும் குறைவான அளவுதான். இது கண்டனத்திற்குரிய விஷயமாகும்.

மறுபுறம் வரிசு அடிப்படையில் அனைத்து பணிகளையும் வழங்கிட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை. தொழிலாளர் நலத்துறை சார்பிலும் திருப்தி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகங்களின் இயக்குநர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை இதே போல இழுத்தடிக்கப்பட்டால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவது குறித்த தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடைபெற்ற பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here