கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு. மேலும் ஒருவர் கைது. கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் கடந்த அக்.23 ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் என ஆறு பேரை கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் முகமது இத்ரீஸ் என்ற மேலும் ஒருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆஜர்படுத்துகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் ஜமிஷா மூபினின் நெருங்கிய நண்பரான முகமது இத்ரிஸ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருந்தவர். குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் முகமது இதரீஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.