சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, இந்தியா என்ற பெயர் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலாச்சார ஆய்வு பயணமாகத் தமிழ்நாடு வந்திருந்தனர். இங்கு அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் லக்னோ மாணவர்கள் மானுடவியல் சார்ந்து பல்வேறு ஆய்வுப் பணிகளைச் செய்தனர். இதற்கிடையே அவர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.
ஆளுநர் ரவி:
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என் ரவி பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நமது நாட்டை முதலில் பாரதம் என்றே குறிப்பிட்டோம். பாரதம் என்றால் என்ன எனக் குழம்பிவிட வேண்டாம். வேத காலத்தில் வரையறுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் பழமையான நாகரிக பரிணாமம் தான் பாரதம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. பாரதத்தின் அடிப்படைகளையே மறைக்கும் அளவுக்கு இங்கே அரசியல் அதிகமாகிவிட்டது. இந்தியா என்ற சொல்லை வழங்கியது ஐரோப்பியர்கள் தான். பாரதத்தின் அடையாளங்களையும் ஆன்மாவையும் நீர்த்துப்போகச் செய்யவும் சிதைக்கவும் ஐரோப்பியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். பாரதத்தின் உண்மையான அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது.
அடையாளங்களை அழித்தனர்:
நமது பாரத அடையாளத்தின் நாகரிகம், ஆன்மீகம் மற்றும் கலாச்சார பகுதிகளும் கூட கவனிக்கப்படாமல் விடப்பட்டன. இதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக நமது சமூகத்தில் தொடர்ந்து பிளவு ஏற்பட்டே வந்தது” என்று அவர் பேசினார். தொடர்ந்து பண்டைய சமூகங்கள் குறித்துப் பேசிய அவர், “இந்த மண்ணில் பல மகத்தான முனிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்துள்ளனர். பதஞ்சலி முனிவர், சித்தர்கள், திருமூலர் என்று நாம் பலரையும் சொல்லலாம். தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் ஜோதிடத்தின் மையமாகவே இருந்தது. இங்கே இருந்து கொண்டு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டது.
திட்டமிட்டு நடவடிக்கை:
ஆங்கிலேயர்களின் நலன்களுக்காக இங்கே அவர்கள் முயற்சிகளைச் செய்தனர். பிஷப் ராபா்ட் கால்டுவெல் உள்ளிட்டோர் இங்கே ஆரியம் திராவிடம் எனத் தவறான அடையாளங்களையும் ஏற்படுத்தினர். இதையெல்லாம் செய்து நமது சமூக அமைப்புகளை அழிக்க முயன்றனர். இதன் மூலம் நமது பண்டைய பாரத நகரத்திற்கு அவர்கள் தேசத்தை ஏற்படுத்தினர்” என்றும் அவர் தெரிவித்தனர். பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஆன்மிகம் மற்றும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் தலைமை ஏற்படும் நிலையை அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக இளைஞர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் லக்னோ பல்கலைக்கழக நூலகத்துக்காகத் தொல்காப்பியம், காசி தமிழ்ச் சங்கமம் புத்தகம் என பல்வேறு புத்தகங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்