கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா, திமுகவைச் சேர்ந்த இவர், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 3 வார்டு இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, திடீரென முகமூடி அணிந்த நிலையில் அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் மற்றும் மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மூவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் 3 1/2 சென்ட் நிலம் வாங்கியபோது, ராஜா என்பவருக்கு 2 சதவீதம் புரோக்கர் கமிஷன் தர மறுத்ததாக கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில் ராஜா முன்விரோதம் காரணமாக அடியாட்களுடன் வந்து திமுக வார்டு உறுப்பினர் சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.