அரசாணை 293 யை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம். அரசாணை 293(Health and Family Welfare)யை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ள Allowance மற்றும் Increments யை அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உள்ளிருப்பு போராட்டம் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இச்சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் கோவை மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமை வகிக்கிறார்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் பணியாற்றிய தங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அரசாணையை வெளியிட்டார் எனவும், ஆனால் இந்த அரசாணை தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
மேலும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் இடையிலான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி அரசு மருத்துவர்களின் காலமுறை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் எனவே தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலம் முறை ஊதியத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். அதேசமயம் அந்த அரசாணையை அமல்படுத்த பல்வேறு நிலைகளில் வலியுறுத்திய நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய பலன்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.