கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி.! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை.!

0
104
கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி, இன்று அதிகாலையில் அவரது நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இதில் பல ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுத்தொகையை வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடி வருகிறது. இந்த விழாவையொட்டி மாநிலம் முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்கள்
நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக தான் சென்னையில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அதன்படி திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் கேஎன் நேரு தொடங்கி வைத்தார். கேஎன் நேரு 42 கிலோமீட்டர் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு காலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ தொலைவுக்கான மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டியில் பங்கேற்ற பல ஆயிரம் பேர் மாரத்தான் போட்டியில் ஓட தொடங்கினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின்

இந்த மாரத்தான் போட்டி மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது. அதன்படி 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ, 42 கிமீ என்ற அளவில் தனித்தனியே நடைபெற்றது. போட்டி முடிவடைந்தவுடன் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி 42 கிமீ, 21 கிமீ பிரிவில் ஓடி வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும் 10 கிமீ பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி

5 கிமீ பிரிவில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக இந்த போட்டியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.


பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here