பிப்ரவரி மாதத்தில், ஆளும் பா.ஜ.க. அரசு, வனங்களைப் பாதுகாக்க ஒரு கணக்கெடுப்பு செய்கிறோம் என்ற போர்வையில், சோங்க்ஜோன் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த குக்கிகளை இடம் பெயரச் சொல்லி இருக்கிறது. சோங்க்ஜோன் கிராமம், இம்பாலா பள்ளத்தாக்கை ஒட்டிய சுரசந்தர் மாவட்டத்தில் உள்ளது. அரசே அவர்களின் வீடுகளை இடித்துள்ளது. அது நடக்கும்போதே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் வழி, மைத்தி இனத்தையும் பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என தீர்ப்பு வாங்கி இருக்கிறது.
கொதித்துப் போன குக்கி மாணவர் படையினர், தங்கள் மீதான இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் எதிர்வினையாக அந்த மக்களை வைத்து ஒரு பேரணியை மே3 அன்று சுரச்சந்தர் மாவட்டத்தில் நடத்தி உள்ளார்கள். எதுவுமே நடவாதது போல, அங்கு ஒரு உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைக்க வந்த முதல்வர் பைரன் சிங்கை முற்றுகையிட்ட குக்கி மக்கள், கூட்ட அரங்கையே அடித்து உடைத்துள்ளார்கள். அந்தக் கோபத்தில் தான் அந்த மக்கள் மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிட்டுள்ளது மணிப்பூர் பாஜக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தேறி வருகின்றன. அதில் ஒன்றாக சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் செய்திருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என அக்கட்சி தெரிவிக்கின்றது.
இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் AITUC சங்கங்கள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாஜக அரசிற்கு எதிராகவும், மணிப்பூரில் அரங்கேறிய பெண்கள் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பழங்குடியின மக்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அவர்களது பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தும் நடனமாடியும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இது குறித்து பேசிய சிபிஐ மாநில பொருளாளர் ஆறுமுகம், அகில இந்திய தலைமை அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்கும் போது கோவை மாவட்டத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றார். மேலும் ஒன்றிய அரசு மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மற்றும் அம்மாநில முதல்வர் இருவரும் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.