மருத்துவ படிப்பை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்குவது மருத்துவ கல்வியை வணிக மயமாக்குவது ஆகியவற்றில் நீட் தேர்வு முழு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீட் தேர்வுக்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் அத்தேர்வை தொடர்வது பெரும் சமூக அநீதியாகவே அமையும்.
இந்த சமூக அநீதியிலிருந்து அரசு பள்ளி மாணவர்கள் மீளவேண்டும் என்பதற்காக தான் மருத்துவ படிப்புகளில் அவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான தகுதி பெறுவோரிலும் 79% நீட் தேர்வை 2 அல்லது அதற்கு மேற்பட்ட முறையில் எழுதியவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் மீண்டும் மீண்டும் தனிப் பெயர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதும் சூழலை உருவாக்கி இருப்பதன் மூலம் மருத்துவ கல்வியை வணிகமாக்கும் முயற்சியில் நீட் தேர்வு வெற்றி பெற்றுள்ளது.
மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதற்காகவும், தரத்தை உயர்த்துவதற்காகவும், கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஒரு தேர்வு அந்த நோக்கங்களுக்கு எதிராக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போது, அதை ரத்து செய்வது தானே சமூக நீதியாக இருக்க முடியும். எனவே சமூகநீதியை காப்பதிலும் மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.