நாங்குநேரி சம்பவத்தை தொடர்ந்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளை காரணமாக்கி உருவாக்கும் வன்முறைகளை தவிர்க்கவும், அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி உள்ளது. சாதி,மத பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தை படைத்து அனைத்து தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.
இந்த சூழ்நிலையில் இது போன்ற சம்பவங்கள் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.எதிர்கால சமுதாயம் சாதி,மதம் போன்ற பிற்போக்கு சிந்தனைகளற்ற சகோதர உணர்வுடன் வாழ வேண்டும். புதிய தமிழ்நாடு படைக்கு வேண்டும் என்றெல்லாம் எண்ணி கல்வி,திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி இனப் பிரச்சனைகள் பள்ளி கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்கு தெரிய வருகிறது இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுபோன்ற சம்பவங்களில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி,இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதியை சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த குழு மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்சமூக சிந்தனையாளர்கள்,பத்திரிக்கை துறையினர் என பல தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை பெற்று,அதன் அடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும். என்று முதலமைச்சர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.