சென்னையில் இன்று கன மழை காரணமாக நடைபெற இருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள புல்வெளிகள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், தேவையற்ற அசவுரியங்களைத் தவிர்ப்பதற்காகவும் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.