- சென்னை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்திலிருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்துக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த பகுதியில் 20வருடங்களுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 20 ஆண்டுகள் இல்லை சோழர் காலத்திலிருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 162 ஏக்கரிலிருந்த ஏரி தற்போது 112ஆகச் சுருங்கிவிட்டதாகவும் கூறினர். அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன், உரியப் பட்டாவோடு மக்கள் வீடுகளைக் கட்டி வாழ்ந்துவருவதாகவும் அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அப்போது நீதிபதிகள், கடும் மழைக் காலத்தில் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் அவர்களையும் இணைக்க உத்தரவிட்டனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/madras-high-court-has-ordered-13-officials-to-appear-in-the-contempt-of-court-case/
மேலும்,இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.