பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு.! வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு.!

0
99
எஸ் வி சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.  நீதிமன்றத்தில் விசாரணை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் மனு தாக்கல் செய்தது.

எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஒரு முன்னாள் எம்எல்ஏ இப்படி நடக்கலாமா? பொறுப்புடன் இருக்கக் கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால், காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம். இந்த வழக்கில் எப்படி அனுமதிப்பது? எனவும் கேள்வி எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here