தஞ்சையில் மதுப்போதையில் இருந்த சிக்கன் கிரில் மாஸ்டரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து, அவரிடமிருந்து பணம், செல்போன் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்ற கொலையாளிகள் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக் கோட்டை வடக்கு தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் (41), இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் சிக்கன் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த 16 ஆம் தேதி வேலைக்கு சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை.

மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷின் மனைவி கமலா தேவி தனது உறவினர்களுடன் சேர்ந்து பிரகாஷ் வேலை பார்த்த இடம் உள்பட பல இடங்களில் தேடி உள்ளார்.
அப்போது எங்கு தேடியும் கனவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் கமலா தேவி புகார் அளித்தார்.

இந்த நிலையில் தஞ்சை சரபோஜி கல்லூரி பின்புறம் உள்ள அடர்ந்த மரங்கள் வளர்ந்த வனப்பகுதியில் ரத்த காயத்துடன் பிரகாஷ் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பிரகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரகாஷ் மரணம் குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் பிரகாஷை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து செய்வதும் தெரியவந்தது.
இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தஞ்சை ரெட்டிப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தமிழ் நீதி (39), மங்களபுரம் அணில் நகரை சேர்ந்த பிரவீன் (28) ஆகிய இரண்டு பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரித்ததில் மதுபோதையில் இருந்த சிக்கன் மாஸ்டர் பிரகாஷை கடத்தி சென்று அடித்து கொலை செய்து அவரிடம் இருந்து செல்போன், பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.