திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை எட்டாம் வகுப்பு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாய் தகறாரு குறித்து ஒரு தரப்பு மாணவர் தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றொரு தரப்பு மாணவர்கள் நான்கு பேரை பள்ளிக்கு வெளியே அடித்ததாகவும் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் உறவினர்கள் திருவண்ணாமலையில் இருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தை செவரப்பூண்டி கிராமத்தில் சிறைபிடித்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து அரசு பேருந்தை விடிவிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.