குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களை இணைக்க மறுக்கும் மலுமிச்சம்பட்டி ஊராட்சி. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கோவை மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு அங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் குடிபெயர்ந்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் அங்கு குடிப்பெயர்ந்த நிலையில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தங்களை ஊராட்சியுடன் இணைப்பதற்கு மறுப்பதாக குற்றம் சாட்டி அங்கு வசிக்கும், மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட் குடியிருப்பர் பொதுநல சங்க மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை செய்து தரவில்லை எனவும் குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும்,
அங்குள்ள ஒன்பது போர்வெல் மோட்டார்கள் பழுதடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் அங்கு போக்குவரத்து வசதி இல்லை எனவும் போர்க்கால அடிப்படையில் அங்கு பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அங்கு பல்வேறு குற்ற செயல்கள் நிகழ்வாகவும் காவலர்களும் சரி வராங்க ரோந்து பணிகளை மேற்கொள்வதில்லை என தெரிவித்தவர்கள்
ஒவ்வொரு பிளாக்குகளிலும் பாதுகாப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மேலும் அங்கு தூய்மை பணிகளும் சரிவரும் மேற்கொள்ளபடாமல் இருப்பதால் கழிவு நீர் பொங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும், நோய் தொற்று பரவுவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தங்களை ஊராட்சியுடன் இணைக்க மறுப்பதாகவும், இது குறித்து தாங்கள் கேட்டால் உரிய விளக்கம் அளிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதனால் ரேஷன் உட்பட அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் தங்களுடைய ஆதார் கார்டு ரேஷன் கார்டு போன்ற அனைத்து அரசு ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.