எதிர்கட்சிகளின் கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்க முதல்வர் தவறியது ஏன் ? டிடிவி கேள்வி

0
71
டிடிவி தினகரன்

காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து விட்டது.பணிகளும் மிக விரைவில் தொடங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவின் எதிர்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுக வும் கலந்து கொண்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான எதிர்ப்பை தெரிவிக்காதது ஏன்?என பல கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.மேகதாது அணை தொடர்பாக தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு கேட்கத்தவறியது வருத்தமளிப்பதாக கட்சிகள் கருதுகின்றன.

இந்த சூழலில் கூட எதிர்கட்சிகளின் கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்க முதல்வர் தவறியது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஸ்டாலின்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா?

டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்?

எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா?

பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணைமுதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ?

குறுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here