பேரு மட்டும் பீரங்கி சுப்ரமணின்னு வச்சுகிட்டு பேசச்சொன்னால் இப்படி பதறுகிறீர்களே என அமமுக நிர்வாகியை பொதுக்குழுவில் கலாய்த்தார் டிடிவி தினகரன். அதுமட்டுமல்ல அதென்னெ பீரங்கி சுப்ரமணின்னு பேர் வச்சுருகீங்க, என பெயர்க் காரணம் கேட்டதோடு நிர்வாகி சொன்ன பதிலை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் டிடிவி தினகரன்.
இதனால் அமமுக பொதுக்குழுவில் சிரிப்பலை ஏற்பட்டதோடு கலகலப்பாக கூட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரை வாழ்த்தி பேசுவதற்காக துறையூர் நகர அமமுக செயலாளர் பீரங்கி சுப்ரமணியம் மேடையேறி மைக் பிடித்தார். மைக்கை பிடித்தவுடன்,
”இப்ப வந்து” என நடிகர் வடிவேலு பாணியில் ஜெர்க் ஆகத் தொடங்கினார். தனக்கு பேசத் தெரியாது என்றும் அமமுக மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் தான் தன்னை பேசுமாறு மேடையேற்றி விட்டார் எனவும் வெள்ளந்தியாக பேச, இடையே மைக்கை எடுத்த தினகரன், பீரங்கின்னு பெயரை கேட்டதும் நான் கூட நீங்க நல்லா பேசுவீங்கன்னு நினைச்சேன் என கலாய்த்தார். அதற்கு விளக்கம் அளித்த அமமுக நிர்வாக் பீரங்கி சுப்ரமணியன், தாம் காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 2016 முதல் அமமுகவில் இருப்பதாகவும் காங்கிரஸில் இருந்த போது போபர்ஸ் பீரங்கி ஊழல் என்று தனது நண்பர்கள் தன்னை பட்டப் பெயர் சூட்டி கிண்டலாக அழைத்து வந்ததாகவும் நாளடைவில் அதுவே பீரங்கி சுப்ரமணி என தனது பெயர் மாறிவிட்டதாகவும் கூறினார்.
உங்க பெயருக்கு பின்னால் இப்படியொரு விளக்கமா என்பதை அறிந்த டிடிவி தினகரன் நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அதேபோல் அமமுக பொதுக்குழுவும் கலகலப்பாக நடைபெற்றது.