பாக்கியம் நகர் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை கண்டு , தாமாக முன்வந்து குளத்தை தூர்வாரும் கிராம இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி பாக்கியம் நகர் பகுதியில் சுமார் 100 வருடங்கள் பழமையான பெத்தலமேடு குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 1 ஏக்கர் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது .
100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த குளம் உரிய பராமரிப்பின்றி கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது . இதனால் கிராம் மக்கள் குடி தண்ணீருக்கு சிரமப்பட்டு வந்தனர் , மேலும் நிலத்தடி நீரும் பாதிக்க துவங்கியது .

மேலும் குளம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு இருந்து வந்தது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்தனர் .
இந்த குளத்தை தூர்வாரினால் நீர் மட்டம் உயர்வதுடன், நம்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் என்பதை உணர்த்த அவர்கள் , எப்படியாவது குளத்தை தூர்வாரி நீர் நிரப்ப வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 15க்கும் மேற்பட்டோர் ராஜபிரபு தலைமையில் ஒன்று திரண்டு தங்களது சொந்த செலவில் அந்த குளத்தை ஆக்ரமித்திருந்த சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றியதுடன், ஆக்ரமிப்புகளையும் அகற்றி குளத்தை தூர்வாருவதற்கான ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து குளத்தை தூர்வாருவதற்காக பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நிமல்ராகவனை சந்தித்த இளைஞர்கள் அவரது உதவியை நாடினர். அவரும் இந்த இளைஞர்களின் பெருமுயற்சிக்கு ஆதரவளிக்கும்விதமாக பெத்தலமேடு குளத்தை தூர்வாருவதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்படி அந்த குளத்தை தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தூர்வாரும் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பட்டுக்கோட்டை சிறப்பு விருந்தினர்கள் பணிகளை தொடங்கி வைத்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-terrible-explosion-occurred-in-a-chemical-plant-in-achuthapuram-near-visakhapatnam-in-andhra-pradesh/
நிமல்ராகவன் மற்றும் அப்பகுதி இளைஞர்களுடன் தொடங்கியுள்ள தூர்வாரும் பணிகள் விரைவில் முடிவடைந்து மீண்டும் பெத்தலமேடு குளம் நீர் நிரப்பப்பட்டு அப்பகுதி பொதுமக்களின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்க உள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் பெரும் முயற்சி. இந்த இளைஞர்களின் பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.